ETV Bharat / city

கரோனா தடுப்பூசி செலுத்த நுண் செயல் திட்டம்

author img

By

Published : Oct 11, 2021, 7:06 AM IST

தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் நுண் செயல்திட்டம் அமைக்கப்பட்டு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவுப்படுத்தி உள்ளோம் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி
மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா தடுப்பூசி ஐந்தாவது முகாம் நேற்று (அக்டோபர் 10) நடைபெற்றது. இந்த முகாமின் செயல்பாடுகள் குறித்து ராதாகிருஷ்ணன் செய்தியாளரிடம் பேசினார்.

அப்போது, "தமிழ்நாட்டில் கரோனா மெகா தடுப்பூசி முகாம் நன்கு நடத்தப்பட்டது. ஐந்தாவது மெகா தடுப்பூசி முகாம் இன்று (அக்டோபர் 10) நடைபெற்றது. இந்த முகாமில் இதுவரை 22 லட்சத்து இரண்டாயிரம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பூசி முகாம்களை ஏற்கனவே இரண்டு முறை முதல் அமைச்சர் நேரில் திடீர் ஆய்வுசெய்தார். அதேபோல் இன்று நடைபெற்ற முகாமையும் சைதாப்பேட்டை பகுதியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் ஆய்வுசெய்தார். அங்கிருந்த தடுப்பூசி செலுத்த வந்தவர்களிடம் முகாம் குறித்தும் விசாரணை மேற்கொண்டார்.

பண்டிகை கால பாதுகாப்பு

மேலும் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் தடுப்பூசி முகாமை மக்கள் இயக்கமாகச் செயல்படுத்திட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். தடுப்பூசி முகாம்களுக்கு இன்று (அக்டோபர் 10) விடுமுறை அளிக்கப்படுகிறது.

பண்டிகை காலங்கள் அதிகமாக உள்ளதால், மக்கள் சுய பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும். பொதுமக்களிடம் முகக் கவசம் அணிவதில் சுணக்கம் காணப்படுகிறது. முகக் கவசம் அணிவதில் கவனக்குறைவு கூடாது. தடுப்பூசி செலுத்தி இருந்தாலும் முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.

தடுப்பூசி செலுத்தாதவர்களைக் கண்டறிந்து செலுத்துவதற்கும் ஒவ்வொரு மாவட்டத்திலும் நுண் செயல்திட்டம் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவுப்படுத்தியுள்ளோம்.

குறையும் தொற்று

தமிழ்நாட்டில் 37 ஆயிரத்திற்கு மேல் சென்ற கரோனா தொற்று பாதிப்பு, கடந்த வாரம் ஆயிரத்து 500 ஆக குறைந்தது. தற்போது அது மேலும் ஆயிரத்து 300 என்ற அளவில் குறையத் தொடங்கியுள்ளது. அதேபோல் மேற்கு மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தியதால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து கரோனா தொற்று பரவல் குறையத் தொடங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை ஐந்து கோடியே 24 லட்சம் தவணை தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளது. அக்டோபர் 10 காலையில் ஐந்து கோடியே மூன்று லட்சமாகத் தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை இருந்தது.

முதல் தவணை தடுப்பூசி 67 விழுக்காடு பேருக்கும், இரண்டாவது தவணை தடுப்பூசி 24 விழுக்காட்டினருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. இதுவே செப்டம்பர் 12ஆம் தேதிக்கு முன்னர் 48 விழுக்காடாக முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை இருந்தது.

கரோனா தடுப்பூசி செலுத்தாத பகுதிகளைக் கண்டறிந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் நுண் செயல்திட்டம் அமைக்கப்பட்டு, அதனடிப்படையில் தடுப்பூசி செலுத்தும் பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளோம்.

சில மாவட்டங்களில் தொற்று குறைந்துவந்தாலும் பொதுமக்கள் அதிகம் கூடும் ஒரு சில பகுதிகளில் காய்ச்சல் அதிகரிக்கிறது. உடனடியாக அந்தப் பகுதியை துறை அலுவலர்கள் ஆய்வுசெய்து அது எந்த காய்ச்சல் என்பதைக் கண்டறிந்து அதற்கேற்ப நடவடிக்கை மேற்கொள்கின்றனர்.

மழைக் காலங்களில் பாதுகாப்பு

சென்னை பெருங்குடியில் உள்ள குடிசைப் பகுதியில் டெங்குவால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு மாநகராட்சி மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. தொடர்ந்து காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு காய்ச்சல் கண்டறியும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன்

ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள ஒன்பது மாவட்டங்களிலும் காய்ச்சல் கண்டறியும் முகாம் முடுக்கிவிடப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலாக இருந்தாலும், கரோனா தொற்றாக இருந்தாலும் அதனைக் குணப்படுத்தும் தன்மை நம் மருத்துவர்களிடம் உள்ளது. எனவே, எந்த அறிகுறிகள் இருந்தாலும் உடனடியாகச் சோதனை மேற்கொண்டு, உரிய சிகிச்சையை பொதுமக்கள் எடுத்துக்கொள்ள முன்வர வேண்டும்.

அதேபோல் தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ளதால் கபசுரக் குடிநீர், நிலவேம்பு உள்ளிட்ட சித்த மருத்துவம் முறைகளை மக்கள் மேற்கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அடுத்த 3 மாதங்கள் மிக கவனம் தேவை - எச்சரித்த ராதாகிருஷ்ணன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.